கேரளாவில் உயிரிழந்த தமிழரின் குடும்பத்துக்கு நிதியுதவி

muruganகேரளாவில் நடந்த சாலை விபத்தில் படுகாயமடைந்து பரிதாபமாய் உயிரிழந்த தமிழர் முருகனின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் வழங்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு விடுத்துள்ள அறிக்கையில், கேரளாவில் பாரிப்பள்ளிகொல்லம் சாலையில், 6.8.2017 அன்று ஏற்பட்ட சாலை விபத்தில், இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, திருநெல்வேலி மாவட்டம், சமூகரெங்கபுரம் கிராமம், மஜரா துரைகுடியிருப்பு மேலூரைச் சேர்ந்த கணபதியின் மகன் முருகன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த சாலை விபத்தில், முத்து பலத்த காயமடைந்தார் என்பதை அறிந்து வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்த முருகனின் குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாயும், காயமடைந்த முத்துவுக்கு 50 ஆயிரம் ரூபாயும், முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே கேரள சட்டசபையில் முருகனின் மரணத்திற்காக பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்ட முதல்வர் பினராயி விஜயன், ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

-lankasri.com

TAGS: