சிவராசாவின் அரசியல் செயலாளர், 2 ஊழியர்களுக்கு 4 நாள் தடுப்புக் காவல் நீட்டிப்பு

சிவராசா1ரிம 20,000 தொடர்பான ஊழல் வழக்கு விசாரணைக்காக, எம்.ஏ.சி.சி.-ஆல் கைது செய்யப்பட்ட சுபாங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.சிவராசாவின் அரசியல் செயலாளர் மற்றும் 2 ஊழியர்களுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை வரை, 4 நாள் தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இன்று, மதியம் 12 மணியளவில் டாங் வாங்கி மாவட்டப் போலிஸ் தலைமையகத்தில் (ஐபிடி), இந்தத் தடுப்புக்காவல் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

எம்.ஏ.சி.சி. சட்டப்பிரிவு செக்‌ஷன் 16(a), விசாரணைக்கு உதவுவதற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஐபிடி டாங் வாங்கிக்கு, சுபாங் எம்.பி. ஆர்.சிவராசாவும் அவருடைய வழக்கறிஞர் எரிக் போல்சனும் வந்திருந்தார்.

தனது 3 ஊழியர்களும் கைது செய்யப்பட்டது நியாயமற்றது என்று கூறியதோடு, அவர்கள் கையூட்டு வாங்கியதாகக் கூறப்படுவதையும் சிவராசா மறுத்தார்.

“என்னுடைய ஊழியர்கள் குடிநுழைவுத் துறை அதிகாரிகள் அல்ல. அவர்களுக்கு அதிகாரம் இல்லை, அவர்கள் எப்படி குடிநுழைவுத் துறை தொடர்பான விசாரணையை மூட, இலஞ்சம் வாங்க முடியும்?” என அவர் கேள்வி எழுப்பினார்.

“அவர்கள் தொழில் ரீதியில் விசாரிக்கப்பட வேண்டுமென நான் கேட்டுக்கொள்கிறேன். லாக்கப்பில் அவர்கள் துன்புறுத்தப்படாமல், எந்தவொரு அரசியல் தாக்கமும் இல்லாமல், விரைவாக விசாரணையை முடிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்,” என்றார் அவர்.

“எம்.ஏ.சி.சி.-யின் விசாரணைக்கு ஒத்துழைக்கத் தயாராக உள்ள நிலையில், அவர்களைக் கைது செய்து, தடுப்புக்காவலில் வைத்திருப்பதை அடக்குமுறை என நான் கருதுகிறேன்,” என சிவராசா டாங் வாங்கி போலிஸ் நிலையத்தில் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார்.

கைதானவர்களில், சிவராசாவின் அரசியல் செயலாளரான அவரின் உறவினர் நவீன் குலராசாவும் சிவராசா2அடங்குவார். அவரோடு ஜோஷுவா கலைச்செல்வன் மற்றும் நிகோகாம் ஆகிய இருவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

முன்னதாக, தனது 3 ஊழியர்களின் நேர்மையில் தனக்கு முழு நம்பிக்கை உண்டு என சிவராசா ஓர் அறிக்கையில் கூறியிருந்தார். மேலும், கடந்த ஆகஸ்ட் 9-ம் நாள், நாடாளுமன்றத்தில் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, குடிநுழைவுத் துறை தொடர்பாக தான் எழுப்பிய கேள்வியால், இவர்கள் அநியாயமாக தண்டிக்கப்படுகிறார்கள் எனத் தாம் நம்புவதாகவும் தெரிவித்தார்.

“நான் எழுப்பியப் பிரச்சனையால், இன்று என் ஊழியர்களை எம்.ஏ.சி.சி. தடுத்து வைத்திருப்பது எனக்கு வருத்தத்தைத் தருகிறது,” என்ற அவர், எம்.ஏ.சி.சி.-யின் விசாரணையைத் தான் எதிர்க்கவில்லை என்றும், விசாரணையை ஆதரித்து தேவையான தகவல்களை வழங்கியுள்ளதாகவும் தெரிவித்தார்.

குடிநுழைவுத் துறையில் எந்தவொரு சம்பந்தமும் இல்லாத தனது ஊழியர்களைக் கைது செய்து, தடுத்து வைத்திருப்பதில் நியாயமில்லை என சிவராசா கூறினார்.